Tuesday, May 3, 2011

ஒசாமா ...பிரபாகரன் ..,ஒரே மாதிரியான தலை வலி




ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை வாசிப்பதற்காக இணையத்தில் உலா வந்த போது பல்வேறு வகையான புதுமையான வாதங்களை காண நேரிட்ட்து.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோது எழுந்த விவாதம் போலவே, தற்போதைய சூழ்நிலையிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.


ஒசாமா கொலையை கண்டிக்கும் பல்வேறு வலைப்பதிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதற்கெல்லாம் காரணம் இல்லாமலும் இல்லை.

உலகின் பெரிய அண்ணன் தோரணையில் வலம் வந்து கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த அமெரிக்காவிற்கு மரணபயம் காட்டும்விதமாக, அவர்களது ராணுவ தலைமையகத்தை தாக்கி,
"ஷாக் அட்டாக்" கொடுத்தவர் என்பதால் ஒசாமாவை போற்றுகின்றனர் சிலர்.

பல ஆயிரம் பேரை கொன்றவர் என்ற போர்வையில் ஒசாமா கொல்லப்படுகிறார் என்றால், பல்வேறு நாடுகளில் தனது
நாட்டாமை போர்வையில் அப்பாவி மக்களை அமெரிக்கா கொல்லுவது மட்டும் நியாயமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

2001 செப்டம்பர் இரட்டை கோபுர கட்டடத்தின் மீதான தாக்குதலுக்கு பின் அமெரிக்கா
"பயங்கரவாததிற்கு எதிரான போர்கோலம்" பூண்டபின்
"இது குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிரான போர் அல்ல" என்பதை அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமும், பயமும் அமெரிக்காவுக்கு இருந்தது.

முன்பு
சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டபோது ஜார்ஜ் புஷ், சொல்லிய அதே வார்த்தைகளைத்தான் இப்போது ஒசாமாவுக்காக, பாரக் ஒபாமா ஒப்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இந்த விஷயத்தில் நன்றாக சிக்கிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. "இது அமெரிக்க- பாகிஸ்தான் ராணுவ
கூட்டு நடவடிக்கை அல்ல" என்று ஆசிப் அலி சர்தாரி சொல்வது கூட இதற்காகத்தான்.

உண்மையில் ஒசாமா இருப்பது பாகிஸ்தானுக்கு தெரியாது என்றால் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியவர்கள் அங்கே பதுங்கியிருப்பதுவும் பாகிஸ்தான் அரசுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே?


அமெரிக்க படைகள் ஒசாமாவை கொல்ல நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டதை அனுமதித்த பாகிஸ்தான், இந்தியாவை இதே போல களமிறங்க அனுமதிக்குமா?

ஒரு வேளை ஏதாவது ஒரு பாசத்திற்காக ஒசாமா தங்குவதற்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்திருந்தால், "தீவிரவாதத்தை ஒழிக்கிறேன்" என்று அமெரிக்காவிடம் கை நீட்டி வாங்கிய 19.5 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் = 100 கோடி) பாகிஸ்தானை பொறுத்தவரை துரோகத்திற்கான பணம் தானே?
ஒரு பக்கம் அமெரிக்காவிடம் பணம், இன்னொரு பக்கம் ஒசாமாவுக்கு அடைக்கலம். பாகிஸ்தானின் இந்த அழுகுணி ஆட்டம், தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கையின் சிங்கள அரசு போட்ட இரட்டை வேடம் போல அல்லவா இருக்கிறது?

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு என்று
இந்தியா கொடுத்த பணத்தை, தமிழர்களை ஒழிக்க பயன்படுத்திக்கொண்டது இலங்கை. இந்தியாவும் இந்த இரட்டை வேடத்தை ஒப்புக்கொண்டது போலவே
"கள்ளமௌனம்" காத்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டபோது இருந்த நிலையில் தான், இந்தியா ஒசாமா கொல்லப்பட்ட தற்போதும் இருப்பதாக தெரிகிறது. "இது பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஏற்பட்ட முன்னேற்றம்" என்று இப்போது கருத்து தெரிவித்து இருக்கும் இந்திய பிரதமர் அப்போது கொஞ்சம் அடக்கி வாசித்தார் அவ்வளவே. இந்தியாவில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி என்ற ரீதியில் மட்டும் அறிக்கை வாசித்து, ராஜபக்ஷேவுக்கான விசுவாசத்தை காட்டியது மட்டும் இந்தியாவின் நடந்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டபோது எழுந்த
"இது போட்டோகிராபிக்ஸ் மாயம்" என்ற சர்ச்சை இப்போதும் எழுந்திருக்கிறது.

பிரபாகரன் இன்னும்
உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்புபவர்கள் போலவே, இன்னும் ஒசாமா உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்புபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
பிரபாகரனை வீழ்த்திவிட்டேன் என்று மார்தட்டியே தன்னுடைய அரசியல் செல்வாக்கினை உயர்த்திக்கொண்ட ராஜபக்ஷேவை போலவே, இனி அதலபாதளத்துக்கு போய்விட்ட தன்னுடைய செல்வாக்கினை ஒபாமா உயர்த்திக்கொள்வார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஒபாமா கொல்லப்பட்டபின், பாரக் ஒபாமா வெளியிட்ட உரையினை கொஞ்சம் பாருங்கள். நம்முடைய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அறிக்கைகள் போலவே இருக்கும்.

பின்லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க நான் உத்திரவிட்டேன். பின்லேடனை நீதியின் பின் நிறுத்த நான் முடிவு செய்தேன். இதெல்லாம் பாரக் ஒபாமா  உரையில் இருந்த வாசகங்கள்.
மூச்சுக்கு முன்னூறு தடவை நான்,நான்,நான்...

இதெல்லாம் விட ஹைலைட்டாக, "நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்துகாட்டுவோம் என்பதை இப்போது மீண்டும் நிரூபித்துக்காட்டியுள்ளோம்" என்ற
பஞ்ச் டயலாக் வேறு.

இத்தனை விஷயங்களை மனம்போன போக்கில் யோசித்த போது புலப்பட்டது என்னவோ இது தான்.
"இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என உலகம் முழுவதும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.மக்களும் நம்மைப்போலவே இருக்கிறார்கள் - தன் ரத்தத்தை உறிஞ்சும் அவர்களை ரசித்து பாராட்டியபடி"

No comments:

Post a Comment